ஹாங்காங்: மிகப்பெரிய இணையத்தள விற்பனை நிறுவன மான அலிபாபா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான ஜாக் மா அவரது 54வது வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வருங்காலத்தில் படிப்பை நோக்கமாகக் கொண்ட சமூக சேவைப்பணிகளில் ஈடுபடப் போவதாக அவர் கூறியுள்ளார். 1964 ஆம் ஆண்டு பிறந்த ஜாக் மா புகழ்பெற்ற சீனத் தொழிலதிபர். சிறு வயதிலேயே ஆங்கிலம் கற்பதில் ஆர்வமுடையவராக அவர் இருந்தார். இதற்காக ஆங்கிலம் பேசுபவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டார்.
இதனாலேயே 1999 ஆம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கும் முன் ஜாக் மா ஆங்கில ஆசிரியராக இருந்தார். ஓய்வு குறித்துப் பேசிய ஜாக் மா, "விரைவில் ஆசிரியர் பணிக்கே திரும்பிவிடுவேன்'' என்று தெரி வித்துள்ளார். இவர் சீனாவின் முதன்மைப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.