பிரபல நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் திருமணத்திற்கு கைத் தொலைபேசி கொண்டு வர கட்டுப்பாடு விதித்துள்ளனர். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி தீபிகா படுகோன். இவரும் பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். விழாக்களுக்கு ஒன்றாக வரும் இவர்களின் நெருக்கம், 'பத்மாவத்' படத்துக்குப் பிறகு அதிகமாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தீபிகாவும், ரன்வீர் சிங்கும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். திருமணம் இத்தாலியில் நடக்க இருக்கிறது. இதை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
இந்தத் திருமணத்துக்கு குடும்பத்தினர் உட்பட மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர். திருமணத்துக்கு கைத்தொலைபேசியுடன் வரவேண்டாம் என்று அவர்களுக்கு மணமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணப் புகைப்படங்கள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்தக் கட்டுப்பாடு என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பு நடைபெற்ற சோனம் கபூர் ஆனந்த அஹுஜா திருமண விழாவிற்கு ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். ஆனால் திருமண வைபோக புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கின. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டதால் அவர்கள் திட்டமிட்ட தனிப்பட்ட திருமணம் பொதுத் திருமணமாக மாறியது.