மதுரை: பொது வாழ்க்கையில் இருப்பதால் பொய்க் குற்றச்சாட்டு களை எதிர்கொள்வது அதிமுக நிர்வாகிகளுக்குப் பழகிவிட்டதாக அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தங்கள் மீது சுமத்தப்படும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் மன தைரியத்தோடு எதிர்கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளார்.
அதிமுக அமைச்சர்கள் தொடங்கி, முதல்வர் வரை அனைவர் மீதும் எதிர்க்கட்சிகள் பல் வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்ட குற்றச் சாட்டுகள் என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
"நாங்கள் எதிரியாகக் கருதுவது ஓரளவேனும் வாக்கு வங்கி உள்ள திமுகவைத்தான். இடைத்தேர்தலில் அதிமுக அரசின் சாதனைகளைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம்," என்றார் உதயகுமார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்கொண்ட சவால்களைக் காட்டிலும் தற்போது அதிக சவால்களைத் தாங்கள் எதிர்கொண்டிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே செய்தியாளர்க ளிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், குட்கா முறைகேடு தொடர்பில் விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என்று குறிப்பிட்டார். ஜெயகுமார் மீது சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் அமைச்சர் கூறினார். இதற்கிடையே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிமுக அமைச்சர்கள் உடனடியாக விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.