பெர்லின்: கடந்த ஐந்தாண்டுகளில் ஜெர்மனியின் சிறந்த காற்பந்து ஆட்டக்காரருக்கான விருதை நான்காம் முறையாகத் தட்டிச் சென்றுள்ளார் மெசுட் ஓசில், 27 (படம்). ரியால் மட்ரிட் குழுவின் முன்னாள் வீரரும் இப்போது ஆர்சனல் குழுவிற்காக விளையாடி வருபவருமான ஓசில் 2011 முதல் 2013 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அந்த விருதைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
2014ஆம் ஆண்டில் சிறந்த ஜெர்மன் வீரருக்கான பெருமையை இவரிடமிருந்து தட்டிப் பறித்தார் முன்னாள் பயர்ன் மியூனிக் வீரரும் இப்போதைய ரியால் மட்ரிட் ஆட்டக்காரருமான டோனி க்ரூஸ். இந்த நிலையில், அவ்விருதை மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளார் ஓசில்.
வாக்கெடுப்பில் 51,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஓசிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது, பதிவான மொத்த வாக்குகளில் 45.9% ஆகும். பயர்ன் வீரர் தாமஸ் முல்லர் (15.9%), கொலோன் குழுவின் ஜோனஸ் ஹெக்டர் (13.6%) ஆகியோர் அடுத்த இரு நிலைகளைப் பிடித்தனர். 2015ல் மட்டும் ஜெர்மனிக்காக எட்டு அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்றார் ஓசில். அதில் ஐந்தில் ஜெர்மனி வாகை சூடியது.
நவம்பரில் நடந்த பிரான்சிற்கு எதிரான நட்புமுறைப் போட்டியில் மட்டும் இவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. குழு அளவிலான போட்டிகளில் 16 கோல்களை அடிக்கத் துணை செய்த இவர் 87 கோல் வாய்ப்புகளையும் உருவாக்கினார். ஐரோப்பாவின் சிறந்த ஐந்து லீக்குகளில் இதுவே ஆகச் சிறந்த செயல்பாடு.