ஐஸ்வர்யா சுப்ரமணியன்
இன, மொழி வேறுபாடுகளைத் தாண்டி ஒவ்வொரு பண்டிகையையும் ஒன்றிணைந்த சமூகமாகக் கொண்டாடுகிறது சிங்கப்பூர். இதற்குச் சான்று பகர்ந்தது, நேற்று பல்லின மக்கள் பங்கெடுத்த புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா. உழவர் திருநாளைத் தமிழர்கள் மட்டும் கொண்டாடாமல் சிங்கப்பூரில் வாழும் அனைத்து இன மக்களும் கொண்டாட வாய்ப்ப ளிக்கும் வண்ணம் ஒன்பதாவது ஆண்டாக களைகட்டியது பொங்கல் விழா, ரத்த தான முகாம்.
சுடரொளி உறுமி மேளம், தமிழ்க் கிராமியப் பாடல்கள், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை நட னம் போன்றவை விழாவுக்கு மெருகு சேர்த்தன. பாரம்பரியத்தைப் பறைசாற்றும் நோக்கத்தில் உறியடிப்பதற்கும் மாடுகள், பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியைக் காட்சிக்கு வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றைப் பார்வையிட்டு பொங்கல் வைப்பது, நெல் குத்துவது போன்றவற்றில் ஈடுபட்டார் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வடமேற்கு வட்டாரத்தின் மேயரும் புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் டியோ ஹோ பின்.
புக்கிட் பாஞ்சாங்கில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் வட மேற்கு வட்டார மேயர் டாக்டர் டியோ ஹோ பின், அவரது துணைவியார், ஏற்பாட்டுக் குழுவினர் ஆகியோர் முளைப்பாரியைச் சுற்றி கும்மியடித்து ஆடுகின்றனர். படம்: திமத்தி டேவிட்