சென்னை: நடிகை நக்மாவுக்கு திரைப்படம் குறித்து தெரிந்த அளவுக்கு தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து விவரம் தெரியவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு உச்சநீதி மன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலை யில் கடந்த வாரம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலரான நக்மா, ஜல்லிக் கட்டு நடத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று செய்தியார்களிடம் கூறினார்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியானது மாடுகளை வதைப்பதற்கு சமம் என்று கண்டனம் தெரிவித்திருந் தார். அவரது இக்கருத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்திருந்தனர். இந்நிலையில் நக்மாவின் இக்கருத்து குறித்து இளங் கோவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "நக்மாவுக்கு 'பாட்ஷா'வை (தமிழ்த் திரைப்படம்) தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு குறித்து தெரியவில்லை," என நகைச்சுவையுடன் பதிலளித்தார் இளங்கோவன்.