சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் 'ரஜினி முருகன்'. இதில் சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' பாடல் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. 'ரஜினி முருகன்' படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். அதில் 'என்னம்மா' பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டப் போது விளக்கமளித்தார் சிவா.
"அப்போது, அந்தப் பாடல் 'என் னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?' என்று நையாண்டி செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து அந்த வரி எடுக்கப்பட்டது," என்று அவர் பதிலளித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் இந்தப் பதிலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். "என்னம்மா பாடல் தொலைக்காட்சி நையாண்டி நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் உண்மையான வசனத்துக்கு சம்பந்தமில்லை என்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அப்படி என்றால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு சிறந்த நிகழ்ச்சியா?
"சிவகார்த்திகேயனின் நையாண்டியும் கிண்டலும் எல்லை மீறிப் போய்விட்டது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னால் பிரபலமடைந்த வசனத்தை வணிக ரீதியாக பயன்படுத்திவிட்டு இப்போது மாற்றிச் சொல்கிறார்கள். என்னைக் கிண்டல் செய்தவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? "என்னம்மா' பாடலுக்கு நான்தான் காரணம் என்று சொன்னால் நான் பணம் கேட்டு விடுவேனா? கவலை வேண்டாம் சிவகார்த்திகேயன். இதை விட எனக்கு உருப்படியான நிறைய வேலைகள் இருக்கின்றன," என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதுகுறித்து சிவகார்த்திகேயன் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை. எனினும் அவர் விரைவில் தனது மவுனத்தைக் கலைப்பார் எனத் தெரிகிறது. எப்படியோ, பிரச்சினை முடிவுக்கு வந்தால் சரிதான்.