புதுச்சேரியில் கடந்த பத்தாண்டுகளாக இயங்கிவரும் விடுதலைப் போராட்ட வீரர் இரத்தினவேல் - வேங்கடேசன் அறக்கட்டளை ஆண்டுதோறும் அயலகத் தமிழ் அறிஞர்களை தமிழகத்திற்கு அழைத்து அவர்களின் சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டுப் பட்டயமும் பரிசுத்தொகை பத்தாயிரமும் பொன்னாடையும் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
2015ஆம் ஆண்டு விருது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா ஆண்டியப்பனுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவரும் அறக்கட்டளை நிறுவனருமான முனைவர் இரத்தின வேங்கடேசன் தலைமையில் விழா நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு வைத்திய நாதனிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டு ஏற்புரையாற்றிய திரு நா.ஆண்டியப்பன், "இதுபோன்ற விருதுகள் சுட்டெரிக்கும் கடும் வெய்யிலில் கொதிக்கும் தார்ச் சாலையில் நடந்து செல்லும் ஒருவனுக்குச் சாலையோர மரங்கள் எப்படிச் சிறிது நேரம் இளைப்பாற இடங்கொடுத்து அவன் மீண்டும் பயணத்தைத் தொடர ஊக்கமளிக்கின்றனவோ அதைப்போல் இந்த விருதுகள் என் இலக்கியப் பயணத்திற்கும் தமிழ்ப் பணிக்கும் ஊக்கமளிக் கின்றன," என்று கூறினார்.