அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்த உணர்ச்சிபூர்வமான வேண்டுகோளை விடுத்துள்ளார் அதிபர் பராக் ஒபாமா. துப்பாக்கி வாங்குவது தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கும் திட்டம் பற்றி வெள்ளை மாளிகையில் மக்களிடம் உரையாற்றியபோது அவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அவர் பேசினார். "துப்பாக்கி வைத்திருக்க அமெரிக்கர்களுக்கு உள்ள சட்டபூர்வ உரிமை, வழிபடுவதற்கும் அமைதியாக ஒன்றுகூடவும் வாழவும் உள்ள உரிமையுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும்," என்றபோது அவரது குரல், கோபத்தில் உயர்ந்தது.
கனக்டிகட், நியூடன் நகரில், 2012 டிசம்பரில் 20 குழந்தைகளும் ஆறு பெரியவர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கையாள்வது தமது பணியில் மிகச் சிரமமானதாக இருந்தது என்றார் அவர். "அந்தச் சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் எனக்கு கோபம் வரு கிறது," என்று கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட அவர் கூறினார். "அந்தச் சம்பவம் என்னை மாற்றியது, அந்நாளை மாற்றியது" என்றார் அவர்.