தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை நேற்றுத் தொடங்கியவேளையில் தமிழக வெள்ள சேதங்களைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சரவைக் குழு தமிழக அரசைப் பாராட்டியுள்ளது. உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையிலான குழு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியது. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மாநில அரசின் அனைத்துத் துறைகளும் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டதுடன், சுகாதாரப் பணிகள், நோய் தடுப்பு மருத்துவ முகாம்கள், சீரமைப்புப் பணிகளை உரிய நேரத்தில் செய்ததற்காக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் தமிழக அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்ததாக டி.வி.எஸ்.என்.பிரசாத் கூறினார்.
வெள்ளப் பிரச்சினையை அதிமுக அரசு முறையாகக் கையாளவில்லை என திமுகவும் மற்றக் கட்சிகளும் சாடி வரும் வேளையில் மத்திய அரசின் இந்த பாராட்டில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து இதுவரை அதிமுக எதையும் கூறவில்லை. அதிமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும்' என்றார். இந்நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது, மக்கள் நலக்கூட்டணியும் விரும்புகிறது.
மக்கள் நலக் கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவை உள்ளன. தேமுதிக, தமாகா, கட்சிகளை இந்தக் கூட்டணிக்கு இழுக்கும் பணியை இக்கூட்டணியினர் மேற்கொண்டு உள்ளனர். தேமுதிக வராவிட்டால் கூட்டணி பலம் வாய்ந்ததாக இருக்காது என சிலர் நினைப்பதால் அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.