ஜகார்த்தா: பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கேட்டுக்கொண்டுள்ளார். இந்தோனீசியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சந்தேகப் பேர்வழிகளை அதிகாரிகள் சுலபமாக கைது செய்தற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங் கள் வழிவகுக்கும் என்றும் அவர் சொன்னார். ஜகார்த்தாவில் சென்ற வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை கருத்தில் கொண்டு பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என்று திரு விடோடோ கூறியுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து திரும்பும் போராளிகள் இந்தோனீசியாவில் மேலும் பல தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் அடைவதாக கூறப்படுகிறது. ஆனால் கொண்டுவரப்படும் புதிய சட்டத்தை அதிகாரிகள் அடக்கு முறையைப் பின்பற்ற ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடும் என்று குறை கூறுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்படும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்படாமலேயே ஒரு வாரம் காவலில் வைத்திருக்க புதிய சட்டம் வகை செய்கிறது. அத்துடன் இந்தோனீசியர்கள் யாரேனும் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் போராளிகளுடன் சேர்ந்து சண்டையிட்டால் புதிய சட்டத்தின்கீழ் அது சட்டவிரோதச் செயலாகக் கருதப்படும்.
பாலித் தீவில் டென்பசாரில் உள்ள குட்டா கடற்கரை பகுதியில் இந்தோனீசியப் போலிசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி