திரைக்கு வருமா, வராதா என்றிருந்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் கண்டிப்பாக வந்துவிடும் என்ற நம்பிக்கையைத் தற்போது ஏற்படுத்திவிட்டது. இனி சிம்புவே நினைத்தாலும் படம் எந்தத் தடையும் இல்லாமல் வந்துவிடும் என்று விநியோகஸ்தர்களே ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்கள். காரணம் படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனம். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை விநியோகித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 'இது நம்ம ஆளு' படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கியுள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த நிறுவனம் அடுத்த வாரம் 'அரண்மனை 2' படத்தை வெளியிடுகிறது. அதற்கடுத்து பிப்ரவரி மாதக் கடைசியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் 'இது நம்ம ஆளு' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நயன்தாரா வந்து ஒரு பாடலுக்கு ஆடிக்கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இருக்கும் நான்கு பாடல்களை வைத்தே படத்தை வெளியிட்டு விடுவார்கள் என்று சொல்கிறார்கள். தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தின் மொத்த செலவும் ரூ.30 கோடியாம். இந்தப் படத்தை வருகிற மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளில் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி உண்மையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் சிம்பு ரசிகர்கள்.