சென்னையில் மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் நகரில் உள்ள சூலைப்பள்ளம் முக்கியமான இடம். இந்தப் பகுதியில் மழை வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். வெள்ளப் பாதிப்பில் இருந்து அந்தப் பகுதி முழுமையாக மீண்டு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். அந்தப் பகுதியில் நடிகர் கஞ்சா கருப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஹோட்டல் திறந்துள்ளார். அதற்கு 'கவிஞர் கிச்சன்=கஞ்சா கருப்பு' என்று பெயர் வைத்துள்ளார். இந்த ஹோட்டலில் பல வகையான உணவுகளைப் பாதி விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.
இது பற்றி கஞ்சா கருப்பு கூறுகையில், "சூலைப்பள்ளம் பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். அதனால் அவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்துடன் கவிஞர் கிச்சன் ஜெயங்கொண்டானுடன் இணைந்து லாப நோக்கம் இல்லாமல் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஹோட்டலைத் திறந்திருக்கிறேன். இந்தப் பாதி விலை ஹோட்டலைத் தொடர்ந்து நடத்துவேன். இது எனக்கு மனத்திருப்தியைக் கொடுக்கிறது," என்கிறார் கஞ்சா கருப்பு. தொடருட்டும் அவருடைய தொண்டுகள்.