தைப்பூசத்தை ஒட்டி முருகனின் பாடல்கள் அடங்கிய 'காவடியாம் காவடி' ஒலிவட்டு இம்மாதம் 16ஆம் தேதி, சனிக்கிழமை தேங்க் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் வெளியிடப்பட்டது. இந்த ஒலிவட்டைத் தயாரித்து அதிலுள்ள எட்டுப் பாடல்களையும் பாடியவர் திரு பரசு கல்யாண். இவர் சிங்கையில் பக்தி இசைக் கச்சேரிகளில் பாடியிருக்கிறார். ஏழு வயதில் பாட ஆரம்பித்த இவர் கலைமாமணி திரு வீரமணி ராஜூவின் வழிகாட்டுதலோடு தெய்வீகப் பாடல்கள் பாடுவதில் புலமை பெற்றவர். 'வீரைய்யா', 'ஆனந்தம் ஆனந்தமே' போன்ற திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல் பாடியிருக்கிறார். 'பக்தி அலை' என்ற பக்திப் பாடல்கள் ஒலிவட்டை முதலில் வெளியிட்ட திரு பரசு கல்யாண் அடுத்து சுவாமி ஐயப்பன் பாடல் ஒலிவட்டை வெளியிட்டார்.
'காவடியாம் காவடி' பரசு கல்யாணின் மூன்றாவது ஒலிவட்டு வெளியீடாகும். 'காவடியாம் காவடி' ஒலி வட்டின் இசை அமைப்பாளர் திரு விஜய் சங்கர். தொழில்முறை இசை அமைப்பாளரான இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களின் தலைப்புப் பாடலுக்கு இசை அமைத்த அனுபவம் உடையவர்.
இடப்பறத்தில் 'காவடியாம் காவடி' பாடலாசிரியர் திரு தாம் சண்முகம், நடுவில் இசை அமைப்பாளர் திரு விஜய் சங்கர், வலப்புறத்தில் பக்தி இசைப் பாடகர் பரசு கல்யாண். படம்: திரு தாம் சண்முகம்