முஹம்மது ஃபைரோஸ்
இவ்வாண்டு பொங்கல் ஒளியூட்டு நிகழ்ச்சி நாளை லிட்டில் இந்தியாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் தொடங்க உள்ளது. ஹேஸ்டிங்ஸ் சாலை சந்திப்பில் தொடங்கி ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் வரை நீடிக்கும் ஒளியூட்டு, இம்மாதம் இறுதி வரை சிராங்கூன் சாலையை அலங்கரிக்கும். ஒளியூட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு 'பொங்கு தமிழ்' குழுவினரின் மகத்தான கிராமிய நிகழ்ச்சி பிஜிபி மண்டப வளாகத்தில் நடைபெறும். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 70 நடனக் கலைஞர்கள் இந்திய கிராமிய இசைக்கு நடனமாடுவர்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் 'லிஷா' எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமை சங்கத் தலைவர் திரு ராஜகுமார் சந்திரா இதனைத் தெரிவித்தார். ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் பிஜிபி மண்டப வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு தொடங்கவிருக்கும் பொங்கல் ஒளியூட்டு நிகழ்ச்சியில் நிதி, கலாசார, சமூக, இளையர் துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
இவ்வாண்டின் பொங்கல் விழாவையொட்டி லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் ஒளியூட்டு அலங்காரம். படம்: திமத்தி டேவிட்