உலகப் பொருளியலுக்கும் எண்ணெய் விலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்ணெய் தேவையில்லாத நாடே இல்லை என்ற அளவுக்கு அதன் தாக்கம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதனால்தான் அது கறுப்புத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. சாதாரண தங்கத்தின் விலை வீழும்போது அனைவரும் குறிப்பாகப் பெண்கள், தங்கள் வயிற்றில் பால் வார்த்தது போல் உணர்வர். ஆனால் கறுப்புத் தங்கத்தின் விலை வீழும்போது, அதனையே மூலதனமாகக் கொண்ட பல நாடுகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும்.
2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து எண்ணெய் விலை கிட்டத்தட்ட 75 விழுக்காடு சரிவு கண்டுவந்துள்ளது. அது கடந்த திங்கட்கிழமை பீப்பாய்க்கு 28 அமெரிக்க டாலருக்கும் குறைவான விலைக்கு இறங்கியது. இது 12 ஆண்டுகளில் இல்லாத குறைந்த விலையாகும். இது இன்னும் 20 டாலர் வரைக்கும் சரியலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விலைச் சரிவுக்கு மிக முக்கிய காரணங்கள் சில உள்ளன. பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் தங்கள் சந்தைப் பங்கை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததால் எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பதோடு இருப்பும் பெருகிக் கொண்டே போகிறது. இது போதாதென்று, இதுவரை ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளியல் தடைகள் அகற்றப் பட்டிருப்பதால் ஈரானும் தனது எண்ணெய்யை சந்தைக்குக் கொண்டு வரப்போகிறது. எனவே விலைகள் மேலும் குறைவதைத் தடுக்க முடியாது.
மாற்று வழிகளில் எரிசக்தியைப் பெறும் அமெரிக்கா ('ஷேல்' எரிவாயு) எண்ணெய் இறக்குமதியை வெகுவாகக் குறைத்துள்ளதும் சீனப் பொருளியல் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளதும் எண்ணெய் விலை மீது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த எண்ணெய் விலைச் சரிவால் வெகுவாகப் பாதிக்கப்படும் நாடுகளில் எண்ணெய் ஏற்றுமதி நாடான மலேசியாவும் அடங்கும். எண்ணெய் விலையில் ஏற்படும் ஒவ்வொரு டாலர் சரிவுக்கும் ஆண்டுக்கு 300 மில்லியன் ரிங்கிட் வருவாய் இழப்பை எதிர்நோக்குகிறது மலேசியா. எண்ணெய் விலை பீப்பாய்க்கு 48 அமெரிக்க டாலர் வரை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் அதன் தற்போதைய வரவு செலவுத் திட்டம் வரையப்பட்டுள்ளது. நிலைமை மிக மோசமாக இருப்பதால் எதிர்வரும் வியாழக்கிழமை வரவு செலவுத் திட்டத்தில் மாற்றங்களை அறிவிக்க உள்ளது மலேசிய அரசாங்கம். அந்த அறிவிப்பு மலேசியர்களின் வாழ்க்கைமுறையில் இன்னும் இறுக்கத்தை ஏற்படுத்தப் போகும் கசப்பு மருந்தாகவே இருக்கும்.