கோலாலம்பூர்: கெடா மாநில முதலமைச்சர் முக்ரிஸ் மகாதீருக்குப் பதிலாக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவது 'கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது' என்று உத்துசான் மலேசியா நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சர் இம்மாத இறுதிக் குள் பதவி ஏற்கக்கூடும் என்று கெடா அம்னோ தலைவர்களில் ஒருவர் கூறியதாக அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது. கெடா அம்னோ துணைத் தலைவர் அகமட் பாஷா அம்மாநிலத்தின் புதிய முதலமைச் சராக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நஜிப் ரசாக், முக்ரிஸ் விவகாரம் குறித்து பரிசீலிக்க தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். இந்த விவகாரம் எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலை எந்த வகையில் பாதிக்கும் என்பது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் சொன்னார். கெடா முதலமைச்சர் முக்ரிஸ் மகாதீரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அம்மாநில கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ள வேளையில் இந்தப் பிரச்சினைக்கு எந்த வழியில் தீர்வு காணலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.