இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இன்று செல்சியுடன் மோதும் ஆர்சனல் குழுவின் கோல்காப்பாளர் பீட்டர் செக் தம்மை விற்றதன் மூலம் செல்சி பெரும் தவறு செய்துள்ளது என்பதை நிரூபிக்கத் துடித்துக்கொண் டிருக்கிறார். செல்சியின் முன்னாள் நிர் வாகியான ஜோசெ மொரின்யோ பீட்டர் செக்கை ஆர்சனலுக்கு விற்று அவர்களின் பிரிமியர் லீக் கிண்ண ஆசைகளுக்கு உதவக் கூடாது என்று அடம்பிடித்ததாக பிபிசி செய்தி கூறுகிறது. ஆனால், ஒரு விசுவாசமான ஊழியருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யத் தீர்மானித்து செல்சியின் உரிமையாளர் அவரை ஆர்சனலுக்கு விற்க எடுத்த முடிவின் காரணமாக அவர் ஆர்சின் வெங்கர் குழுவிற்கு சென்றார்.
இவர் ஆர்சனலுக்கு செல்ல முடிவெடுத்தவுடனேயே அவரால் ஆர்சனல் குழுவிற்கு இந்தக் காற்பந்துப் பருவத்தில் 12 முதல் 15 புள்ளிகள்வரை கிடைக்கக் கூடும் என்று செல்சி அணியின் கேப்டன் ஜான் டெர்ரி ஆருடம் கூறினார். பீட்டர் செக் இதுவரை விளையாடிய 355 ஆட்டங்களில் 173 முறை எதிரணியினர் கோல் எதுவும் போடாமல் தமது அணி யைக் காத்திருக்கிறார்.