பெய்ஜிங்: சீனாவில் பிரபலமான 35 உணவகங்களில் தயாராகும் உணவு வகைகளில் அபின் கலந்த சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தெரிவித்த அந்நாட்டின் உணவு, மருந்துப் பொருட்களை நிர்வகிக்கும் அமைப்பு, 25 உணவகங்களின் உரிமையாளர்கள் மீது குற்றவியல் விசாரணை நடைபெறுவதாகவும் மேலும் பத்து உணவக உரிமையாளர்கள் மீது சாதாரண முறையிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியது.
இதில் பெய்ஜிங் நகரில் பிரபலமான ஹுடா உணவகமும் அடங்கும் என்று கூறப்படுகிறது. சீனாவின் சில உணவகங்களில் பரிமாறப்படும் இறைச்சி சூப்பில் இந்த அபின் கலக்கப்படுவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கப்படுகின்றன.