நாடாளுமன்றக் கூட்டம் நேற்று தொடங்கியதும் மன்றத்தின் துணை நாயகர்களாக பொங்கோல் ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சோங், மவுண்ட்பேட்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை, இதற்கு முந்திய நாடாளுமன்றத்தில் துணை நாயகர்களில் ஒருவராக இருந்த மரின்பரேட் உறுப்பினர் சியா கியான் பெங் முன்மொழிந்தார். நிதி, சட்ட மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா அதனை வழிமொழிந்தார்.
சார்ல்ஸ் சோங் அனுபவமிக்க ஓர் உறுப்பினர் என்றும் 1988ஆம் ஆண்டு முதல் மன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக் கப்பட்டு வருகிறார் என்றும் சியா கியான் பெங் குறிப்பிட்டார். பல்வேறு தேர்ந்தெடுப்புக் குழுக்களில் திரு சார்ல்ஸ் இடம்பெற்று இருந்ததோடு பல்வேறு நாடாளுமன்ற துணைக் குழுக்களை வழிநடத்தியதாக அவர் சொன்னார். சார்ல்ஸ் சோங் இதற்கு முந்திய நாடாளுமன்றத்திலும் துணை நாயகராகப் பணியாற்றினார். நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு துணை நாயகரான லிம் பியாவ் சுவான் பற்றிக் குறிப்பிட்ட திரு சியா, பல்வேறு நாடாளுமன்றக் துணைக் குழுக்களில் அவர் பணியாற்றி யதையும் காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் சிங்கப்பூரின் வட்டாரப் பிரதிநிதியாக அவர் பொறுப்பு வகித்ததையும் சுட்டிக்காட்டினார்.
புதிய துணை நாயகர்கள் இருவரும் அனுபவம், நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்களது கடமைகளைத் திறம்படச் செய்வார்கள் என்றும் திரு சியா நம்பிக்கை தெரிவித்தார்.