மாணவர்களை வெறும் எண்களால் மதிப்பிடுவதைக் காட்டிலும் உண்மையான அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும் என்று தற்காலிகக் கல்வி அமைச்சர்களில் ஒருவரான ஓங் யி காங் நேற்று மன்றத்தில் தெரிவித்தார். அவர் தமது உரையில், "மதிப்பெண்களாக இருந்தாலும் தரவரிசையாக இருந்தாலும் எண்களின் அடிப்படையில் நம்மை நாமே பெரிதாகப் பார்த்துக்கொள்கிறோம். அது ஓர் இடர்ப்பாடு. "ஆனால், உண்மையான அம் சங்களில் தெளிவான கவனம் செலுத்த வேண்டும் என்பதையே இந்த நாடு விரும்புகிறது.
"தனிமனித மதிப்பும் கல்விக் கழகங்கள், நாடு, மக்கள் ஆகியவற்றின் நிலையும் உண்மையான மதிப்பீட்டுக்குரிய அம்சங்கள். எண்கள் என்பது இவற்றில் ஓர் அங்கம் மட்டுமே. "மக்களைப் பொறுத்தவரை தீர்மானித்து முடிவெடுப்பது என்பது முக்கியம். விரிவான தகுதி வரை யறையின் அவசியம் குறித்து நான் ஏற்கெனவே குறிப்பிட்டு இருக்கிறேன். ஒரு மனிதனிடம் உள்ள தரம், பண்பு, விருப்பம், சாதனை, நன்னெறி போன்றவற்றை ஒரே ஓர் அளவால் கணித்துவிட முடியாது. "ஒன்றைத் தீர்மானிக்க அரசு முறையில் அதிகமான அம்சங்கள் கவனிக்கப்படுகின்றன.
"சமூக உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு சம்பளம் அடிப்படையிலான தகுதி கணக்கீட்டை உதாரணமாகச் சொல்லலாம். இதற்காக அதிகமான தர கணக்கீடுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. "2,500 வெள்ளி சம்பாதித்து உடற்குறை உள்ள இரு பெற்றோர்களைப் பார்த்துக்கொள்பவர் அல்லது தனிமையில் வாழ்ந்து 1,500 வெள்ளி ஈட்டுபவர் இவர்களில் யார் வசதி குறைந்தவர் என்பதை எப்படித் தீர்மானிப்பது? "பொது ஏலக்குத்தகைகூட விலைமதிப்பின் அடிப்படையில் மட்டும் பார்க்கப்படுவதில்லை. செய்யப்போகும் உத்தேச வேலைகள் எந்த அளவுக்குக் கவர்ச்சியானதாகவும் விலக்கமுடியாததாகவும் உள்ளது என்பதும் கவனத்தில்கொள்ளப்படுகிறது," என்று விளக்கினார் அமைச்சர் ஓங் யி காங்.