அண்மைய பொதுத் தேர்தலுக்குப் பிறகு சிங்கப்பூரின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சமூகம், வர்த்தகம், வீடு போன்ற பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசினர். அங் மோ கியோ குழுத் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினரான திரு டேரல் டேவிட் (படம்) தனது முதல் மன்ற உரையில் மாறிவரும் சூழலில் எதிர்வரும் பிரச்சினைகளைச் சமாளிக்க இரு வழி களை எடுத்துரைத்தார். ஒன்று அடுத்த தலைமுறை சிங்கப்பூரர் களிடையே தாக்குப்பிடிக்கும் தன்மையைப் புகட்டி அத்தியாவசிய வாழ்க்கைத் திறன் களையும் கற்றுக்கொடுப்பது. கல்வி அமைச்சு இந்த வாழ்க்கைத் திறன்களை பாடத் திட்டங்களில் எவ்வளவு சிறிய வயதில் தொடங்கமுடியுமோ அந்த வயதில் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்னொரு வழி நமது சமூகக் கட்டமைப்பையும் பந்தங்க ளையும் வலுவாக்குவது. பல இன, மதத்தினர் வாழும் சிங்கப்பூரில் தற்போது செய்யவேண்டியது சிங்கப்பூரர்களை யும் புதிய குடியேறிகளையும் ஒன்றிணைப்பது என்றார் அவர். பல சமயம் ஆங்கிலம் தெரியாததனாலேயே சமூக நிகழ்ச்சிகளில் புதிய குடியேறிகள் கலந்துகொள்வதில்லை என்று சுட்டிய அவர் சிங்கப்பூரில் ஆங்கிலம் வர்த்தக, தகவல் மொழியாகவும் முக்கியமாக அனைத்து இனத்தவரும் பேசும் மொழியாகவும் இருப்பதால் புதிதாக நிரந்தரவாசம் அல்லது குடியுரிமை கொடுப்பதற்கு முன்னால் கட்டாய அடிப்படை ஆங்கிலத் திறமை பெற்றிருக்கும் சாத்தியத்தை ஆராய வேண்டும் என்றும் திரு டேரல் கேட்டுக்கொண்டார். மேலும் குடியுரிமை வழங்குவதற்கான தகுதிகளில் ஒன்றாக ஒருவர் வாழும் வட்டாரத்தில் அவர் விரும்பிய சமூக அமைப்புடன் சமூக சேவை செய்திருப்பதையும் கட்டாயப்படுத்தலாம் என்றார் அவர்.