கொச்சி: டோனியை ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மொகிந்தர் அமர்நாத், பிரசன்னா ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விராட் கோஹ்லி கேப்டன் பொறுப்பை ஏற்க இதுவே சரியான நேரம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் டோனிக்கு முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி ஆதரவு தெரிவித்து உள்ளார். "2007ஆம் ஆண்டு டோனி இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். என்னை கேட்டால் அவரை கேப்டனாக நியமித்தது சிறந்த முடிவு என்று சொல்வேன்.
ஏனென்றால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவர் மிகச் சிறந்த வெற்றி கேப்டனாக உருவாகி உள்ளார். அவர் எப்போதும் சீராக விளையாடக் கூடிய வீரராக இருக்கிறார். "டெஸ்ட் கேப்டனான விராத் கோஹ்லியிடம் அதிகமான திறமைகள் இருக்கத்தான் செய்கிறது. டோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதில் அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். ஆனால் டோனியிடம் இருந்து விராத் கோஹ்லி இன்னும் ஏராளமான பாடங்களைக் கற்க வேண்டும்," என்று சையது கிர்மானி கூறியுள்ளார்.