காலச்சக்கரத்தின் சுழற்சியில் அகப்படாத சமுதாயம். இருந்தும் அவர்கள் வாழ்வில் அதிவேக தொழில்நுட்பம். நீதி காக்கும் அரசர், அவருடைய வேடிக்கையான அமைச்சர்கள். அரசவை குழப்பங்களுக்கிடையே, துரோகம், காதல், சூழ்ச்சி. இவை அனைத்தும் சேர்ந்த ஒரு படைப்புத்தான் உத்ரா 2016. புலிப்புரம் என்ற நாட்டில் நிலவும் பிரச்சினைகள், அதை எதிர்கொள்ள மக்களும் அரசவையினரும் எடுக்கும் முயற்சிகள் = இவையே உத்ரா நாடகத்தின் கதை கருவாகும். கேளிக்கை அம்சத்திற்காக ஆடல் பாடல்கள் இருந்தாலும், கதையோட்டத்தில் பல சமூக செய்திகளும் அடங்கியிருக்கும்.
பழமையையும் புதுமையையும் ஒன்றிணைத்து ஒரு புதிய சாதனை படைக்க முற்பட்டுள்ளனர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்ற மாணவர்கள். முழுவதும் மாணவர்களின் உழைப்பில் தயாராகி வரும் உத்ரா, சிங்கப்பூர் தமிழ் நாடக அரங்கில் தனக்கென ஒரு முத்திரை பதிக்கவுள்ளது. அதிக அளவில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு பார்வையாளர்களுடன் இருவழித் தொடர்புகொள்ளும் அங்கங்களும் உள்ளன. கடந்த ஒன்பது மாதங்களாக நடிகர்கள், நடனமணிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள், ஆடை அலங்காரக் குழு, இசைக் கலைஞர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் படைப்பிற்காகத் தங்களை அர்பணித்துள்ளனர். "ஒவ்வொரு மாணவருக்குள்ளும் இருக்கும் கலை ஆர்வமும் கட்டுக்கடங்கா உழைப்புமே உத்ராவின் உந்து சக்தியாகும். கலைகளுக்கு எல்லைகள் இல்லை என்பதை நிரூபிக்கும் ஒரு படைப்பாக உத்ரா அமையும்," என்றார் உத்ராவின் தலைவரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவருமான குமரன் தமிழ்செல்வம், 25.