மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷிக்னாபூர் சனீஸ்வரர் கோவிலில் சனி பகவானை வழிபடப் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பலநூறு ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்தத் தடையை உடைக்கும் நோக்கில் நேற்று முன்தினம் சுமார் 1,500 பெண்கள் ஒன்றுதிரண்டு கோவிலை நோக்கிப் படையெடுத்தனர். பெண்களை அனுமதிக்கக் கோரி அந்தக் கோவிலை முற்றுகையிடச் சென்ற அவர்களை போலிசார் தடுத்து நிறுத்தினர். அதனால் ஆவேச மடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாட்டின் குடியரசு தினத்தை 'கறுப்பு தினம்' என்று குறிப்பிட்டு அவர்கள் முழக்கமிட்டனர். இந்நிலையில், போராடும் பெண்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்துத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்தத் தயார் என கோவில் நிர்வாகிகள் நேற்று தெரிவித்தனர். படம்: இணையம்