திட்டமிட்ட வரி நிதியிலிருந்து வாங்கத் திட்டமிடப்பட்ட 1,000 கூடுதல் பேருந்துகளில் முக்கால் பகுதிக்கு மேற்பட்டவை கடந்த ஆண்டு இறுதிக்குள் சேவையில் விடப்பட்டன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. பேருந்துச் சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் $1.1 பில்லியன் நிதி 1,000 பேருந்துகளை வாங்க ஒதுக்கப்பட்டது. இவை பத்து ஆண்டுகளுக்குச் சேவை யில் ஈடுபடுத்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. அந்த 1,000 பேருந்துகளில் கடந்த ஆண்டு இறுதி வரையில் 760 பேருந்துகள் சேவையாற்றின என்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,000 பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருக்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
இதற்கிடையே, ஏழு புதிய பேருந்துச் சேவைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை எஸ்பிஎஸ் டிரான்சிட் சேவைகளான 47, 117, 118, 258, எஸ்எம்ஆர்டி சேவை 979, 'சிட்டி டைரக்ட்' சேவைகள் 664, 665. நடப்பில் இருந்த எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் 49 எஸ்எம்ஆர்டி யின் 983 ஆகிய இரு சேவைகளும் நீட்டிக்கப்பட்டன. பேருந்துச் சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் மேலும் 240 பேருந்துகள் சாலைகளில் பயணங்களை மேற்கொள்ளும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. கோப்புப் படம்