பணி செய்யாத, மக்களின் புகார்களுக்குச் செவி சாய்க்காத அதிகாரிகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் செயல்பாட்டை உடனடியாக மதிப்பீடு செய்து, தேவைப்பட்டால் பதவி நீக்கம், ஓய்வூதியத்தை வெட்டுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசின் செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு செயலாளர்கள், தலைமை செயலாளர்களுடனான மாதாந்திர கூட்டத்தில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை ஆய்வுசெய்யும்போது இதனைக் கூறிய அவர், சுங்கத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் அரசு நடவடிக்கைகள், மக்களின் குறைகேட்பு, இணையம் வழியிலான தொடர்பு உள்ளிட்ட பணி கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அரசு ஊழியர்களில் பலர் மீது அடுத்தடுத்துப் புகார் வந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார். பொதுமக்களுடன் தொடர்புடைய அனைத்து மத்திய அரசுத் துறைகளும் மக்களின் குறை தீர்க்கும் பிரிவை தொடங்கி உதவி செய்ய வேண்டும் என்ற அவர், மக்கள் குறை தீர்க்கும் பிரிவுக்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் உத்தரவு குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.