மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 4ஆம் நிலையிலுள்ள அக்னியேஸ்கா ரட்வன்ஸ்காவை 6=0, 6=4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் இவர் 7ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியால் மிகவும் உற்சாகமடைந்துள்ள செரீனா, இறுதிச் சுற்றுக்கு இவ்வளவு விரைவில் முன்னேறியதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்று கருத்துரைத்துள்ளார்.
மேலும், இறுதிச்சுற்றில் சிறப்பான ஆட்டத்தைத் தன்னால் வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இறுதிச் சுற்றில் 7ஆம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் அல்லது தரவரிசை நிலையில் பின்தங்கியிருக்கும் ஜோகன்னா கோன்டாவை செரீனா எதிர்கொள்வார். இதில் செரீனா வெற்றி பெற்றால் 22வது தடவையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ஆவார்.