திருச்சி: திருவானைக்காவல் ஒத்ததெருவில் வசிப்பவர் தனபாக்கியத்தம்மாள் (60). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது வீட்டு வாசலில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தனபாக்கியத்தாம்மாளின் கழுத்தில் கிடந்த சங்கிலியைப் பறித்துச் சென்றனர். புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் குற்றப் பிரிவு காவல்துறையினர் இது குறித்து விசாரித்தனர். இதனிடையே, சங்கிலியைப் பறித்துச் சென்ற நபர்கள் அதை விற்க முயன்றபோது, அது "கவரிங்' என்று தெரியவந்தது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த இருவரில் ஒருவர், இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் தனபாக்கியத்தம்மாள் வீட்டுக்கு மீண்டும் வந்தார். வாசலில் நின்றுகொண்டிருந்த தனபாக்கியத்தம்மாளின் முகத்தில் 'கவரிங்' சங்கிலியை வீசியெறிந்துவிட்டு அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டார்.