தேவைக்கு ஏற்ப கட்டித் தரப்படும் வீடுகளில் (பிடிஓ) உள்ள குறைபாடுகள் தொடர்பாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கட்டடச் சேவை நிலையங்களில் செய்யப்படும் 95 விழுக்காடு புகார்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சரிசெய்யப்படுவதாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய பிடிஓ வீடுகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து திரு லீயிடம் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்குப் பதிலளித்த திரு லீ, வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஓராண்டுக்குள் புதிய பிடிஓ வீடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை வீடுகளைக் கட்டிய ஒப்பந்தக்காரர்கள் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
வீடுகளில் குடியேறிய ஓராண்டுக்குள் புதிய வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டடச் சேவை நிலையங்களுக்குக் குடியிருப்பாளர்கள் சென்று புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. குறைபாடுகள் சரிசெய்யப்பட்டும் அவை திருப்திகரமாக அமையவில்லை என்றால் ஒவ்வொரு புகாரையும் வீவக நேரடியாகக் கண்காணித்து வீட்டு உரிமையாளர்களின் அக்கறைகளைச் சரிசெய்யும் என்ற உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.