தாயாக புது அவதாரம் எடுத்துள்ளார் பிந்து மாதவி. 'பசங்க 2' படத்தில் எட்டு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நடித்து கவனத்தை ஈர்த்த வகையில் பாராட்டுகள் குவிகிறதாம். தனி நாயகியாகப் பல படங்களில் நடித்துவிட்டு மூன்று நாயகிகளில் ஒருவராக 'பசங்க 2'ல் நடிக்கக் காரணம் என்ன...? "கதைதான் காரணம். நான் எதிர்பார்த்துக் காத்திருந்த படம் இது. சிறு குழந்தைகளுக் குத் தாயாக நடித்தது மறக்க முடியாத, அற்புதமான அனுபவம். எல்லோருக்கும் எளிதில் கிடைத்திராத அனுபவம்." சரி... அதற்காக எட்டு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்...?
"ஒரு நல்ல படத்தில், அதிலும் பிடித்தமான கதையில் ஒப்புக்கொள்ளும்போது எதைப் பற்றியும் நான் யோசிக்கவில்லை. கதை மட்டும்தான் மனதில் நின்றது. பாண்டிராஜ் சார் அலுவலகம் சென்று கதை கேட்ட நொடியே, இந்தப் படத்தில் நடிப்பது எனத் தீர்மானித்துவிட்டேன். "அம்மாவாக நடிக்கிறாயா... அதுவும் எட்டு வயதுக் குழந்தைக்கு அம்மாவாகவா, இந்த வயதிலா... என தோழிகள் பலரும் பயமுறுத்தினார்கள். ஆனால், பாண்டிராஜ் கதையின் மேலிருந்த நம்பிக்கையால் நடிக்க ஒப்புக்கொண்டேன்."
வேறு ஏதாவது காரணம்...? "ஒரே மாதிரியான கதைகளில் எத்தனை நாட்கள்தான் நடிப்பது...? சவாலை ஏற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். இந்தப் படம் எனக்கு ஒரு சவாலாக இருக்கும் என நம்பினேன். ஆனால், இந்தச் சவாலில் வெல்வேன் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது."
இந்தப் படத்தை, உங்களின் கனவுப் படம் என்று சொல்லலாமா...?
"அப்படியல்ல, என் பிரியத்துக்குரிய படம் என்று சொல்லலாம். வரலாற்றுப் படத்தில் நடிக்கவேண்டும். அதுதான் என் நெடுநாள் கனவு. 'பாஜிராவ் மஸ்தானி' போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை. இல்லையென்றால், பிரியங்கா சோப்ரா நடித்தாரே 'மேரி கோம்', அதுபோன்ற ஒரு சாதனைப் பெண்ணாக நடிக்க ஆசை." பாண்டிராஜ் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறீர்களே...?
"தமிழ்ச் சினிமாவில், நான் மிக மிக நம்பும் ஒருவர் பாண்டிராஜ். அற்புதமான மனிதர். எதுவானாலும் அவரிடம்தான் கேட்பேன். அவரை நான் கண்மூடித்தனமாக நம்புகிறேன். "வேறு யாராவது இயக்குநர் 8 வயதுப் பையனுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டிருந்தால் கொஞ்சமாவது யோசித்திருப்பேன்.