விஜய் தற்போது அட்லி இயக்கும் 'தெறி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி 5ஆம் தேதி இப்படத்தின் முன்னோட்டம் வெளியாக இருக்கிறது. இப்படத்தையடுத்து விஜய், பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது விஜய்யின் 60வது படம்.
விஜயா புரொடக் ஷன் தயாரிக்கிறது. அண்மையில் இப்படத்தின் பூசை எளிமையான முறையில் நடைபெற்றது. இப்படம் குறித்து இயக்குநர் பரதன் கூறும்போது, "முதலில் இப்படத்தின் கதையை விஜயா புரொடக் ஷனில் சொன்னேன். கதையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அவர்கள் விஜய்யிடம் சொல்லச் சொன்னார்கள். கதையைக் கேட்டு சிறப்பாக இருப்பதாகக் கூறிய விஜய், உடனே நடிக்கச் சம்மதித்தார். "திரைக்கதை அமைக்கும் பணி முடிந்துவிட்டது. இப்போது படப்பிடிப்புக்கான தளங்களைத் தேடி வருகிறோம். ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும். இது விஜய் எனக்கு கொடுத்த இரண்டாவது வாய்ப்பு. இதைச் சிறப்பாகப் பயன்படுத்தி படத்தை வெற்றி பெற வைப்பேன்," என்கிறார்.