சென்னை: கடப்பிதழை மறந்துவிட்டு வெளிநாடு செல்ல விமான நிலையம் வந்த நடிகர் ரஜினியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 'கபாலி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதற்காக மலேசியா செல்ல நேற்று காலை சென்னை விமான நிலையம் சென்றார் ரஜினி .காந்த் எனினும் வீட்டிலேயே கடப்பிதழை மறதியாக வைத்துவிட்டதை விமான நிலையத்திற்குள் நுழைந்த பிறகே அவர் உணர்ந்தார்.
இதையடுத்து தனது வீட்டிற்குத் தகவல் தெரிவித்த அவர், சென்னையின் போக்குவரத்து நெரிசலை மனதிற்கொண்டு யாரேனும் ஒருவரை கடப்பிதழுடன் இருசக்கர வாகனத்தில் வரும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து அவரது உதவியாளர்களில் ஒருவர் கடப்பிதழுடன் அரைமணி நேரத்தில் விமான நிலையம் வந்தடைந்தார். இடைப்பட்ட நேரத்தில் ரஜினியை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது தனக்கு பத்ம விபூஷன் விருதை அளிக்க உள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
"நான் நடிக்கும் 'கபாலி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மலேசியா செல்கிறேன். அது முடிந்த பின்னர் 'எந்திரன்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன்," என்றார் ரஜினி. ரஜினி வருகையால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.