இவ்வாண்டுக்கான எஸ்எம்பிசி சிங்கப்பூர் பொது விருது கோல்ஃப் போட்டியில் தென் கொரியாவைச் சேர்ந்த சோங் யங் ஹான் (படம்) வெற்றி பெற்றுள்ளார். உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜோர்டன் ஸ்பீத்தை அவர் ஒரு வீச்சு வித்தியாசத்தில் ஓரங்கட்டியது குறிப்பிடத் தக்கது. 204 நிலை வீரரான 24 வயது சோங், இதுவரை எந்த ஒரு போட்டியிலும் வென்றதில்லை. செந்தோசா கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை வென்ற சோங் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையையும் வெற்றியாளர் கிண்ணத்தையும் தட்டிச் சென்றார்.
272 வீச்சுகளில் சோங் போட்டியை வென்றார். சிங்கப்பூரின் குவின்சி குவேக் 287 வீச்சுகளில் 49வது இடத்தில் போட்டியை முடித்தார். நேற்று முன்தினம் நடைபெற இருந்த இறுதிச் சுற்று மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.