கௌரி சந்திரா
இன்றைய சூழலில் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் நம்மால் வெவ்வேறு தகவல்களை இடம், நேரக் கட்டுப்பாடு இன்றி உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. பலவிதமான தகவல்களும் செய்திகளும் இணையம், சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படுகின்றன. ஆனால் நாம் படிப்பது அனைத்தும் மெய்யா? அனைவராலும் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எழுத முடிவதால் எவ்வாறு உண்மையான தகவல்களை அடையாளம் காண்பது? பொய்யிலிருந்து உண்மையையும் சந்தேகத்திற்கு உட்பட்ட வற்றிலிருந்து பயனுள்ளவற்றையும் கேள்விக்குரியவற்றிலிருந்து நம்பகமானவற்றையும் நாம் தேடி எடுக்கவேண்டும். அதற்கு நமக்கு உதவிகரமாக இருக்கிறது தேசிய நூலக வாரியத்தின் S.U.R.E திட்டம். S.U.R.E என்ற வார்த்தையின் உள்ளடக்கம் மூலாதாரம் (Source), புரிந்துணர்வு (Understand), ஆராய்ச்சி (Research), மதிப்பீடு (Evaluate).
இந்த நான்கு அணுகுமுறைகளின் மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய முடியும். தகவல்களைத் தேடுவது, பகுத்தறிவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க S.U.R.E திட்டத்தை தேசிய நூலக வாரியம் 2013ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. இத்திட்டத்தின் வாயிலாக மக்களுக்குத் தகவல் சார்ந்த பகுத்தறிவு திறன்களைக் கற்பிப்பதே தேசிய நூலக வாரியத்தின் நோக்கம். அமெரிக்காவைத் தவிர்த்து தேசிய அளவில் பொதுமக்களுக்குத் தகவல் சார்ந்த பகுத்தறிவை எடுத்துரைக்கும் முதல் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.