லண்டன்: இந்தப் பருவம் முடிந்ததும் மான்செஸ்டர் சிட்டி யின் நிர்வாகியாக பெலகிரினிக்குப் பதிலாக பெப் கார்டியோலா பொறுப் பேற்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாள் நிலுவைக்குப் பிறகு சிட்டியின் நிர்வாகி பொறுப்பை ஏற்றுள்ள கார்டியோலா மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டு உள்ளார். கார்டியோலாவின் தலைமையில் ஸ்பானிய ஜாம்பவான் பார்சிலோனா 14 பட்டங்களை வென்றது. பார்சிலோனாவின் நிர்வாகியாக கார்டியோலா நான்கு ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.
அப்போது சிட்டி அவரைத் தனது நிர்வாகியாக நியமிக்க முயன்றது. ஆனால் சிட்டியின் அழைப்பை அப்போது ஏற்க மறுத்த கார்டியோலா, ஜெர்மானிய குழுவான பயர்ன் மியூனிக்கின் திசை நோக்கிச் சென்றார். அங்கும் தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்த கார்டியோலா மியூனிக்குடனான ஒப்பந்தத்தை அடுத்த பருவத்திற்கு நீட்டிக்க மறுத்தார். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் கால் பதிக்க தாம் கொண்டிருக்கும் விருப்பத்தை அவர் வெளிப்படுத் தினார். இதுதான் சமயம் என்று சிட்டி அவரை ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்நிலையில், இந்தப் பருவத்துடன் சிட்டியை விட்டுச் செல்ல இருப்பதாகத் தற்போதைய நிர்வாகி மேனுவல் பெலகிரினி உறுதி செய்துள்ளார். வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் சிட்டியின் நிர்வாகி பதவிக்கு அவர் விடைகொடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு கார்டியோலாவைத் (இடது) தனது நிர்வாகியாக சிட்டி ஒப்பந்தம் செய்துள்ளது. பெலகிரினிக்குப் (வலது) பதிலாக அவர் அடுத்த பருவம் குழுவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்பார். படம்: ராய்ட்டர்ஸ்