கோதாவரி: காப்பு சமுதாயத்தினரின் போராட்டத்தையடுத்து கிழக்கு கோதாவரி பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள் ளனர். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி காப்பு சமுதாயத்தினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அச்சமயம் ரயிலுக்கும் காவல் நிலையத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் போலிசார், செய்தியாளர்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
ஞாயிற்றுக்கிழமையன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிரம்மாண்ட பேரணி நடத்திய காப்பு சமுதாயத்தினரால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. வன்முறைச் சம்பவங்கள் தொடரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். காப்பு சமுதாய தலைவரும் முன்னாள் அமைச்சருமான முத்ரகடா பத்மநாபமே அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் என ஒருதரப்பு குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் அவர், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே போராட்டம் தீவிரமடையும் என காப்பு சமுதாயத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
காப்பு சமுதாயத்தினர் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. படம்: ஊடகம்