சிங்கப்பூரில் நேற்று மற்றொரு எண்ணெய்க் கசிவு சம்பவம் ஏற்பட்டது. பிற்பகல் 2.15 மணி அளவில் கம்போங் பாருவில் சீக்கியர் கோயிலுக்கு அருகே எண்ணெய்க் கசிவு (படத்தில் வலதுபுறம்) ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இதனால் சாலையின் ஒரு தடம் மூடப்பட்டு எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
எண்ணெய்க் கசிவை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை ஜூரோங் டவுன் ஹால் ரோட்டுக்கு அருகே சாங்கி நோக்கிச் செல்லும் விரைவுச் சாலையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கு முன்பு வெள்ளிக்கிழமை அன்று புக்கிட் தீமா விரைவுச் சாலையில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்