வாஷிங்டன்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஸிக்கா கிருமி பிரேசிலில் அதி வேகமாகப் பரவி வருகிறது. இங்கு இந்தக் கிருமி தொடர்பான பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 4,074 என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களைப் பாதிக்கும் ஸிக்கா கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசரநிலையை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாலியல் உறவு மூலம் ஸிக்கா கிருமி பரவுவதாக அமெரிக்காவின் டெக்சஸ் மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலத்தில் முதன் முறையாக ஒருவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியுள்ள நிலையில் டல்லாஸ் நகர சுகாதார அதிகாரிகள் இவ்வாறு கூறினர். ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து திரும்பிய ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டவருக்கு இந்த கிருமி தொற்றி உள்ளது என்று அவர்கள் கூறினர். ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் இந்தக் கிருமி பரவுவதாக கருதப்பட்டு வந்தது.
கோஸ்டா ரிக்காவில் பூச்சி மருந்து நெடி தாங்கமுடியாமல் மூக்கைப் பொத்திக்கொள்ளும் சிறுவன். படம்: ராய்ட்டர்ஸ்