தமிழ்த் திரையுலக மக்கள் தொடர்பாளர்கள் சங்கமும் 'வி4' அமைப்பும் இணைந்து கடந்தாண்டு வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், இயக்குநர்களுக்கு விருது வழங்கும் விழாவை சென்னையில் நடத்தினர். இந்த விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை கமல்ஹாசனுக்கு பட அதிபர் ஏவி.எம்.சரவணன் வழங்கினார். நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், இயக்குநர்கள் சுந்தர்.சி., மணிகண்டன், விக்னேஷ் சிவன், பிரம்மா, ராஜேஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கு திரைத்துறை நல்லதொரு தொழில் வாய்ப்பு என்றார். "பள்ளிக்குப் போகாத நான், வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் செல்கி றேன். சினிமாவில் நடித்த எனக்கு ஏவி.எம். நிறுவனம் ஒரு முக்கியமான பள்ளிக்கூடமாக அமைந்தது.
"முதலில் 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் மூன்று வயதுச் சிறுவனாக அறிமுகமானேன். என்னை ஏவி.எம். நிறுவனம் தனது பிள்ளையாகவே கருதி அன்புடன் பார்த்துக் கொண்டது. "என்னைப் பொறுத்த வரையில் சினிமா என்பது மிகவும் நல்ல தொழில். "சிலர் இந்தத் தொழிலுக்கு தங்கள் பிள்ளைகள் வரக்கூடாது என்று நினைத்தால் அதை மறுக்க நான் கடமைப்பட்டு உள்ளேன். சினிமாவில் நேர்மையாக தொழில் செய்பவர்கள், தங்கள் குழந்தைகளை இந்தத் தொழிலில் இறக்கி விடுகிறார்கள். தவறு செய்பவர்கள் தான் தங்கள் பிள்ளைகள் சினிமா தொழிலுக்கு வரக்கூடாது என்று நினைப்பார்கள். நேர்மையாக இருப்பவர்களுக்கு சினிமா ஒரு நல்ல தொழில்.