போலிசாரின் அனுமதியின்றி நடத்தப்படும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என சிங்கப்பூர் போலிஸ் படை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. பாலியல் வன்முறையை ஆதரிக்கக்கூடிய அமெரிக்க ஆடவர் ரூஷ் வி என அழைக்கப்படும் தர்யுஷ் வலிஸாடேயை (படம்) ஆதரித்து சிங்கப்பூர் உட்பட 43 நாடுகளில் நாளை கூட்டம் நடத்தப்போவதாக கூறப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தர்யுஷின் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்ட 165 இடங்களின் பட்டியலில் ஃபோர்ட் கேனிங் பார்க் இடம்பெற்றிருந்தது.
தர்யுஷ் தனது வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பல கட்டுரைகளைப் பதிவேற்றியுள்ளார். அவற்றில் ஒரு கட்டுரை, தனி இடத்தில் செய்யப்படும் பாலியல் வன்முறையை சட்டத்திற்கு உட்பட்டதாக ஆக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. நாளை நடைபெறவிருந்த நிகழ்ச்சியை தர்யுஷ் பிறகு ரத்து செய்தார். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நாடுகளில் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதில் பங்கேற்கும் ஆண்களின் தனிமைக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க இயலாததால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் தனது வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டார்.
தர்யுஷ் வலிஸாடே