பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் டேனியல் கோ தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டாலும் அதிகப்படியான வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மூவர் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதியிலிருந்து திருவாட்டி லீ லி லியன், ஃபெங்ஷான் தனித் தொகுதியிலிருந்து திரு டெனிஸ் டான், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் அங்கம் வகித்த திரு லியோன் பெரெரா ஆகியோர் அந்த மூவர். இருப்பினும், திருவாட்டி லீ தாம் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதி திருவாட்டி லீ லி லியனின் தொகுதி யில்லா நாடாளுமன்ற உறுப்பினரின் இடம் காலியாக அறிவிக்கப் பட்டது. இதற்கிடையே, டாக்டர் கோவை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராக முன்மொழிய முடிவெடுத்திருப்பதாக பாட்டாளிக் கட்சி நேற்று தேர்தல் அதிகாரிக்குத் தெரிவித்ததை தேர்தல் துறை உறுதிசெய்தது.