விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில் 'பிச்சைக்காரன்' ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று பலர் பாராட்டுகின்றனர். விஜய் ஆண்டனியோ, "இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் சசிக்குத்தான் நன்றி சொல்வேன்," என்று நேற்று நடைபெற்ற 'பிச்சைக்காரன்' பட இசை வெளியீட்டின்போது நன்றியுடன் கூறினார். நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் 'பிச்சைக்காரன்' படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. நல்ல கதை அம்சம் உள்ள படம் எனத் திரையுலகில் நல்லதொரு பேச்சும் நிலவி வருகிறது.
கடும் போட்டியிருந்த சூழலில் 'பிச்சைக்காரன்' படத்தின் விநியோக உரிமையைப் பல்வேறு படங்களை வாங்கி விநியோகித்து வரும் 'கே.ஆர். பிலிம்ஸ்' நிறுவனத்தினர் கைப்பற்றியுள்ளனர். படத்தை வாங்கிய பெருமிதத்துடன் கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சரவணன் இது பற்றி பேசும்போது, "அடிப்படையில் ஒரு விநியோகஸ்தராக கடந்த சில ஆண்டுகளாக விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன்.
"அவரது கதைத் தேர்வு, தன்னுடைய பலம் அறிந்து செயல்படும் திறன், திறமையான இயக்குநர்களுடன் பயணம் செய்வது என்று திட்டமிட்டு செயல்படுகிறார். இந்தத் திட்டமிடுதலும் சீரிய முயற்சியும் அவரது தொடர் வெற்றிக்கு மூலக் காரணங்களாகும். "பிச்சைக்காரன் படத்தில் அவர் இயக்குநர் சசியுடன் பயணம் செய்திருப்பது அவரை இன்னமும் உச்சத்துக்குக் கொண்டு செல்லும். இந்தக் கூட்டணி ரசிகர்களின் ரசனைக்கேற்றப் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வர்த்தக ரீதியாகவும் 'பிச்சைக்காரன்' மிகப் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.