தேக்கா சந்தையில் பெண் ஒருவரின் பணப்பையைப் பறித்த ஆடவருக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சியாவ் வெய் ஷெங், 53, எனப்படும் அந்த ஆடவர் தேக்கா சந்தையிலுள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் தேக்கா சந்தையின் கீழ்த்தளத்திலுள்ள கார் நிறுத்துமிடத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளின் அருகே அவர் நின்றிருந்தார். அப்போது திருவாட்டி கண்ணம்மா என்பவர் தமது இடது கையில் கருப்பு நிற பணப்பையுடன் சென்று கொண்டு இருப்பதை சியாவ் கவனித்தார். பணப்பையைப் பறித்துத் திருடும் நோக்கில் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்தார் சியாவ்.
படிக்கட்டுகளில் அந்தப் பெண் இறங்கியபோது அவரது கையிலிருந்த பணப்பையை விடுக்கென்று பறித்தார். சுதாரித்துக் கொண்ட திருவாட்டி கண்ணம்மா, பணப்பையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சியாவின் திருட்டு முயற்சியைத் தடுத்தார். இருப்பினும், அந்தப் பெண்ணின் இடது மணிக் கட்டைக் கடித்த சியாவ், பணப்பையைப் பறித்துக் கொண்டு ஓடினார். உள்ளே இருந்த 70 வெள்ளி பணத்தை எடுத்த பின்னர் பணப்பையை வீசி எறிந்துவிட்டார். அதனுள் பிஓஎஸ்பி வங்கி அட்டை உள்ளிட்ட இதர அட்டைகளோடு மருத்துவர் சீட்டு ஒன்றும் இருந்தது பின்னர் தெரிய வந்தது. பணத்துடன் நேராக என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்குச் சென்று மளிகைச் சாமான்களை வாங்கிய சியாவ் பின்னர் தமது வீட்டுக்குச் சென்றார். கண்காணிப்பு கேமரா மூலம் துப்பறிந்த போலிசார் அன்றைய தினமே சியாவை அவரது வீட்டில் கைது செய்தனர்.