முஹம்மது ஃபைரோஸ்
வேற்றுமைகளைக் கடந்து காதலால் இணைந்த கே.எஸ்.எம் விஜயசேகரன், கூ யென் லிங் தம்பதியர் இன்று சீனப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இருவருக்கும் இடையே நட்புறவை வளர்க்க உதவியது உணவு. இருவரும் அப்போது ஒரே இடத்தில் பணி புரிந்து கொண்டிருந்தனர். திருமதி கூ இளம் வயதிலிருந்தே சைவ உணவு வகைகளைத்தான் விரும்பி உண்பார். குறிப்பிட்ட பண்டிகைக் காலங்களில் மட்டும் சைவ உணவு உண்ணும் திரு விஜயசேகரன், வேலையிடத்தில் தரமான சைவ உணவு கிடைக்காததால் வேலைக்கு வரும் முன்பு திருமதி கூவிடம் தமக்குப் பிடித்தமான சைவ உணவு வகைகளை வாங்கி வரச் சொல்வார். "என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு முறையும் அவர் உணவு வாங்கிக் கொடுத்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது," என்று கூறும் 39 வயது விஜய சேகரன், அவருடைய சைவ உணவுப் பழக்கம் தம்மைக் கவர்ந்ததாகக் கூறினார்.
அதே வேளையில், திருமதி கூவின் பணிவான, கனிவான நடத்தையும் திரு விஜயசேகரனை வெகுவாகக் கவர்ந்தது. "நான் கலாசாரத்தை அதிகம் பின்பற்றுபவன். என்னோடு சேர்ந்து ஒவ்வொரு படியையும் முன்னெடுத்து வைக்கும் வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது அவரோடு பழகியபோது இவர்தான் என்னுடைய மறுபாதி என முடிவெடுத்தேன்," என்றார் விஜயசேகரன். இனம், சமயம், மொழி போன்ற வேறுபாடுகளை விட்டுவிட்டு பண்புநலன்களுக்கே முதலிடம் கொடுத்தனர் இத்தம்பதி. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பழகி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். திருமதி கூவின் பெற்றோர், குறிப்பாக அவரது தாயார் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி திருமணத்திற்கு மனபூர்வமாகச் சம்மதம் தெரிவித்தார். "தமது வற்புறுத்தலால் ஒரே இனத்தவரை திருமணம் செய்துகொண்டு, பின்னர் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததைவிட வேறு இனம், சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மன நிம்மதியோடு நாங்கள் வாழ்ந்தால் அதுவே சிறப்பானது என்றும் என் தாயார் சொன்னார்," என்று நினைவுகூர்ந்தார் திருமதி கூ, 37.
பெற் றோ ருக்கு மகள் தாரிணி இரு மாண்ட ரின் ஆரஞ்சு பழங்களைக் கொடுக்க, மகளுக்கு விஜயசேகரன், கூ யென் லிங் தம்பதி 'ஹோங் பாவ்' உறையை வழங்குகின்றனர். படம்: திமத்தி டேவிட்