பொருளியல் இந்த ஆண்டு மெதுவடையக்கூடிய நிலை இருப்பதால் அரசாங்கம், வர்த்தகம், ஊழியர்கள் ஆகிய தரப்புகள் நீண்டகாலத்துக்கு ஆயத்தமாவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். "பொருளியல் நிலவரம் நிச்சயமற்று இருக்கும் தருணத்தில் சிங்கப்பூர் குறுகிய காலத்திற்கு ஏற்ற, இறக்கங்களைச் சமாளித்தாக வேண்டியுள்ளது. அதே நேரம் நீண்டகாலத்தின் மீதான கவனம் தொடர வேண்டும். திறன் மேம்பாடு, உற்பத்தித்திறன், பயிற்சி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் போன்றவை நீண்டகாலக் கவனத்திற்குரியவை," என்றார் பிரதமர்.
சீனப் புத்தாண்டின் முதல் நாளான திங்கட்கிழமை சாங்கி விமான நிலைய இரண்டாவது முனையத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களைத் தமது துணைவியாருடனும் தொழிற்சங்கத் தலைவர்களுடனும் சென்று பிரதமர் லீ சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தாக்கத்தையும் பயிற்சியையும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றும் மெதுவடையும் பொருளி யல், வர்த்தகங்கள் மேலும் தீவிரமாக நடந்துகொள்வதற்கான வாய்ப்பைத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். "வர்த்தகம் மேம்பட்டிருக்கும் நிலையில் பயிற்சியைப் பற்றிப் பேசும்போது அதற்கு நேரம் இருக்காது. அதே நேரம், வர்த்தகம் சற்று தாழ்ந்திருக்கும் நிலையில் ஆற்றல் சற்று குறைந்திருக்கும்போது நாம் அதற்காக நிறைய செய்ய வேண்டி இருக்கும்.
சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் கிட்டத்தட்ட 200 ஊழியர்களைச் சந்தித்த பிரதமர் லீ, பொது விடுமுறை தினத்திலும் கடமையைச் செய்ததற்காக அவர்களைப் பாராட்டினார். பிரதமரின் வலப்பக்கத்தில் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், அவருக்கு அருகில் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்