சிங்கப்பூரின் சாலைகளில் குறைந்த அளவில் கார்கள் இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைய கார் பகிர்வுச் செயலிகள் கைகொடுக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஓடும் பெரும்பாலான கார்களில் இரண்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே பயணம் செய்வதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. கார் பகிர்வுச் செயலிகள் மூலம் கார் ஓட்டுநர்கள் மற்ற பயணிகளுடன் தொடர்புகொள்ளலாம். இதன் வழி அவர்கள் பயணச் செலவினங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாது, புதிய சந்திப்புகள் மூலம் நட்பு வட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கார் பகிர்வுத் திட்டம் வாயிலாகப் பயணச் செலவினம், பெட்ரோல் செலவு, சாலை மின்னியல் கட்டணச் செலவு போன்றவற்றைக் குறைக்கலாம் என்று RYDE கார் பகிர்வுச் செயலியைப் பயன்படுத்தும் திரு கெல்வின் கி கூறினார். கார் பகிர்வு மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கலாம் என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து தனது கட்டமைப்பில் 20,000க்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக RYDE கார் பகிர்வுச் செயலி தெரிவித்தது.