மதுரை: முழு மதுவிலக்குக்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வரும் 16ஆம் தேதி கூட இருக்கிற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். "தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கோரி மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் இருந்து குமரியை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார். 12ஆம் தேதி அந்தப் பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தார்.
"இதனிடையே அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நெல்லையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. குமரி அனந்தன் முன்வைத்துள்ள மதுஒழிப்பு என்ற கோரிக்கை தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிகமான மக்களின் கோரிக்கையாக மாறி இருக்கிறது," என்று திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.