சிங்பாஸ் பயன்படுத்துவோர் இனி தங்கள் ஓடிபி எனப்படும் ஒருமுறைக்கான கடவுச் சொல்லையும் பயன்படுத்தும் வழி ஆராயப்படுகிறது. விவேகக் கைபேசிச் செயலிகளை அதற்கு உரிய சாதனமாக பயன்படுத்தினால் பயனாளர்களுக்கு அது எளிதாக இருக்கும் என்று தகவல் சாதன மேம்பாட்டு ஆணையம் கருதுகிறது. 'ஓடிபி' என்பது சுயமாகவே உருவாகும் ஒரு கடவுச் சொல் (பொதுவாக இது எண்களாக இருக்கும்). ஓர் இணையத்தளத்துக்குள் நுழைய ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் இது. ஏற்கெனவே இருக்கும் கடவுச்சொல்லையும் கைபேசிக்கு அல்லது பிரத்தியேகக் கருவி மூலம் வரும் 'ஓடிபி' கடவுச் சொல்லையும் சரியாக பதிவு செய்தால்தான் இணையத் தளத்திற்குள் நுழையமுடியும்.
மத்திய சேமநிதி, வருமான வரி, வீவக போன்ற அரசாங்க இணையத்தளங்களுக்குள் தங்கள் சுயவிவரங் களைப் பார்க்கப் பயன்படுவது சிங்பாஸ் எனும் கடவுச்சொல். இதற்கு ஒருவரின் அடையாள அட்டை எண்ணும் அவர் ஏற்கெனவே தேர்ந்தெடுத்த கடவுச்சொல்லும் தேவைப்படும். இனி கூடுதலாக 'ஓடிபி'யும் தேவைப்படும். வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் அரசாங்கங்களின் முக்கிய இணையத் தளங்களைப் பார்வையிட இந்த கூடுதல் பாதுகாப்பு முறை அவசியமாகும்.