சென்னை: தேனி ஆட்சியர் அலுவலகம் பின்னால் இருந்த 250 அடி உயர மலையைக் காணவில்லை என்று ஜெபமணி மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த மலை, கிராவல் வகை மண்ணுக்காக அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மண்ணியல்துறை இயக்குநரிடம் கடந்த 2013ல் புகார் தந்ததாகவும் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறியுள்ளார். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ஒரு மாதத்துக்குள் மலை குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.